பயணிகளுடன் மாணவர்கள் மோதல்: பஸ் மீது கல்வீச்சு-6 பெண்கள் காயம்
சென்னை: சென்னையில் பஸ் கூரையில் அமர்நது பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் பயணிகளுடன் மோதலில் ஈடுபட்டதோடு, பஸ் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தினர். இதில் 6 பெண்கள் காயமடைந்தனர்.
இன்று காலை சென்னை ஐ.சி.எப்பில் இருந்து பெசன்ட் நகருக்கு 47ஏ மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது.
கூட்டம் மிக அதிகமாக இருந்த நிலையில், கீழ்ப்பாக்கம் கார்டன் பஸ் நிறுத்தத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் ஏறினர்.
பஸ்சுக்குள் இடமில்லாததால் பல மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏறி அமர்நதனர். அவர்களது கால்கள் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண்கள் மீது பட்டன. இதை அந்தப் பெண்கள் எதிர்த்தனர். இதனால் வாக்குவாதம ஏற்பட்டது.
அதற்குள் பஸ் பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடைந்தது. அப்போது மாணவர்கள் பயணிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் கீழே இறங்கி பெரிய கற்களை எடுத்து வந்து சரமாரியாக பஸ் மீது வீசினர்.
இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. பின்புறம் அமர்ந்திருந்த அயனாவரத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
மேலும் 6 பெண்கள் காயமடைந்தனர்.
பலத்த காயமடைந்த மகாலட்சுமி முதலில் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த மற்ற பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
சம்பவம் தொடர்பாக மகாலட்சுமி, திரிவேணி, அருள்ஒளி ஆகிய 3 பெண்கள் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் தந்தனர்.
தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தப்பியோடிய மாணவர்களை பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது சதீஷ்குமார் (19) என்ற மாணவர் போலீசாரிடம் இருந்து தப்பி அருகில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி சுவரில் ஏறி குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் எந்தெந்த மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.