அனாதையாக விடப்பட்ட பேசும், கேட்கும் திறனற்ற பெண் குழந்தை
தாம்பரம்: தாம்பரம் பேருந்து நிலையத்தில் 1 1/2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த துப்புரவு ஊழியர்கள் தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் ஆதரவின்றி நின்று கொண்டிருந்த குழந்தையை மேற்கு தாம்பரத்தில் உள்ள குட்லைப் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.
அந்த குழந்தைக்கு பேசும், கேட்கும் திறன் இல்லை. குழந்தை குறைபாட்டுடன் இருப்பதால் தான் அனாதையாக விட்டுவிட்டார்களா? அல்லது யாரேனும் கடத்தி வந்த குழந்தையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின் பேசும் மற்றும் கேட்கும் திறனை பரிசோதிப்பதற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து வருகின்றனர்.
குழந்தையை பற்றி விவரம் தெரிந்தால் 22264151, 22264152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தாம்பரம் பகுதியில் ஒரு வருடத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதரவின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.