மரியானா தீவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்
குவாம் பிராந்தியத்திற்கு அருகே உள்ள மரியானா தீவில் இந்திய நேரப்படி இன்று காலை 7.19 மணியளவில் 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பகுதி குவாமிலிருந்து 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படலாம் என்ற பெரும் பீதி ஏற்பட்டது. இதனால் மரியானா தீவு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர். அதேசமயம், நிலநடுக்கம் காரணமாக ஹவாய் முதல் பிலிப்பைன்ஸ் வரையிலான கடல் பகுதியில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி வரலாமோ என்ற பீதி ஏற்பட்டது. ஆனால் ஹவாய் தீவைத் தலைமையிடமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அபாய எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை.
இருப்பினும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.