சூப்பர் பக் குறித்து பீதி அடையத் தேவையில்லை-ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆய்வாளர்
சென்னை: இந்தியாவிலிருந்து பரவியுள்ளதாக கூறப்படும் சூப்பர் பக் பாக்டீரியா குறித்து அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்று இந்த சூப்பர் பக் பாக்டீரியா கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் பக் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் கார்த்திகேயனும் ஒருவர். இவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிமோதி வால்ஷும் சேர்ந்துதான் இந்த சூப்பர் பக் பாக்டீரியாவை கணடுபிடித்தனர். கார்த்திகேயன், சென்னை தரமணியில் உள்ள ஏ.எல்.முதலியார் முதுநிலை அடிப்படை மருத்துவ ஆய்வு மைய ஆய்வு மாணவர் ஆவார்.
இவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த பாக்டீரியாவுக்கு நியூடெல்லி மெட்டல்லோ-பீட்டா-லேக்டமேஸ்' (என்.டி.எம்.-1) என்று பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகேயன் கூறுகையில், சூப்பர் பக் கிருமி குறித்த எனது ஆய்வறிக்கையை திரித்து வெளியிட்டுள்ளனர். இந்தக் கிருமி குறித்து பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாட்டிலும் இந்த பாக்டீரியா கிருமிக்கு ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வெளியாகும் மருத்துவ இதழில் இந்த பாக்டீரியா கிருமி குறித்துக் குறிப்பிட்டது.
இந்த சூப்பர் பக் பாக்டீரியா கிருமி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் எந்த மருந்துக்கும் இந்த பாக்டீரியா கட்டுப்படாது என்று கூறுவதிலும் உண்மை இல்லை. இந்த பாக்டீரியா கிருமி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளேன் என்றார்.
இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி இந்த பாக்டீரியா குறித்துக் கூறுகையில், சூப்பர் பக் பாக்டீரியா கிருமியை இந்தியாவுடன் தொடர்புபடுத்திக் கூறுவதற்கு அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லை.
இந்தக் கிருமி குறித்து பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துகள் குறித்து இந்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக மருத்துவமனைகளின் தரம் குறித்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளவர்களில் அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவரும் ஈடுபட்டது குறித்து மருத்துவமனை நிர்வாக அளவில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications