காஷ்மீரில் மீண்டும் தலை விரித்தாடும் வன்முறை-ஊரடங்கு அமல்
காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு ஆங்காங்கு வன்முறை வெடித்துள்ளது. இதையடுத்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், அனந்த்நாக், பிஜ்பெஹரா, சோபூர், குப்வாரா, டிரெகாம், பந்திப்போரா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.
அதேபோல பத்காமில் உள்ள ஹைதர்பூரா, பந்திப்போராவில் உள்ள சம்பல் ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பந்திப்போரா, ஸ்ரீநகர், சோபியான் பகுதிகளில் நேற்று நடந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானியின் ஹூரியத் மாநாட்டுக் கட்சி, பத்து நாள் வன்முறை மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.