சிறுவன் ஆதித்யா கொலை-பூவரசிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
சென்னை: சிறுவன் ஆதித்யாவை கடத்திக் கொலை செய்து புதுச்சேரிக்குக் கொண்டு போய் சூட்கேஸில் போட்டு விட்டு வந்த இளம் பெண் பூவரசியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி ஜெயக்குமார். இவரது 4 வயது மகன் ஆதித்யா காணாமல் போனான். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சிறுவன் ஆதித்யா கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசி கைது செய்யப்பட்டார்.
சிறுவனைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்து புதுச்சேரி செல்லும் பேருந்தில் வைத்து விட்டு வந்து விட்டார் பூவரசி.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூவரசி ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும், பின்னர் சென்னை செஷன்ஸ் கோர்ட்டிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார். இரண்டு கோர்ட்களும் அதை நிராகரித்து விட்டன.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு நீதிபதி மதிவாணன் மனுவை இன்று விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் குமணன், பூவரசி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications