சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் அறிவிப்பு
சென்னை: சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஆண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு மருத்துவமனை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை சார்பில் நோயிலிருந்து விடுதலை' என்ற தலைப்பில் கவிதை போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து 118 பேர் தங்கள் கவிதைகளை அனுப்பி வைத்திருந்தனர்.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை டீன்' டாக்டர் மோகனசுந்தரம், சூப்பிரண்டு டாக்டர் வேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசினை ஓசூரை சேர்ந்த கருமலைத் தமிழாழனும், 2-ம் பரிசை கோவையைச் சேர்ந்த வத்சலா மனோகரனும் பெற்றனர்.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசியதாவது:
தர்மபுரி, திருவாரூர், விழுப்புரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கி உள்ளன. சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த ஆண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
தமிழகத்திலேயே சென்னை அரசு மருத்துவமனையில் தான் 4 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இது வரை சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1.44 கோடி ஆகும். அவ்வாறு சேர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 207 பேருக்கு சுமார் 459 கோடி வரை செலவளித்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் பேசினார்.
முன்னதாக, ஸ்ரீ ஜெயின் ரத்னா சுவாதியா டிரஸ்ட் சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் சென்னை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.
இந்த கவிதைப் போட்டியில் ஆயுள் தண்டனைக் கைதி துரைப்பாண்டி என்பவர் எழுதி அனுப்பி வைத்த கவிதைக்கு சிறப்பு பரிசு கிடைத்தது. இவரது பரிசினை கோவை சிறைத்துறை அதிகாரி நவரத்தினம் என்பவர் பெற்றுக் கொண்டார்.