கருணாநிதி இப்படி இலவச திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-பாஜக

வெங்கய்ய நாயுடு எழுதிய டயர்லஸ் வாய்ஸ் ரெலண்ட்லஸ் ஜார்னி என்ற நூல், ஓயாத குரல், ஓய்வில்லாத பயணம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆந்திரா கிளப்பில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு வெங்கையா பேசுகையில், நீண்ட கால தொலைநோக்குடன் கூடிய, மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நிரந்தர வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரிடம் இருந்து இத்தகைய இலவசத் திட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை.
குடிநீர், தடையற்ற மின் விநியோகம், கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, சுகாதாரம், தொடக்கக் கல்வி, முறையான பாசன வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். வறுமையில் வாடும் மக்களின் நலன் கருதி, ரேஷன் அரிசி விநியோகத்துக்காக, மானிய உதவி வழங்கப்படுகிறது.
அரசிடம் போதிய நிதி வசதி இருக்கும்பட்சத்தில் முதலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதன்பின்னரே, இலவச கலர் டிவி மற்றும் அனைவருக்கும் கூடுதல் டிவி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆதாயம் கருதி இத்தகைய இலவச திட்டங்களை நிறைவேற்றும் போக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசிடம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே மனப்பான்மையும், போக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே வளர்ந்து வருகிறது. இது மிகுந்த கண்டனத்துக்குரியது.
பொதுவாக மக்கள் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் திட்டங்களை அரசியல் பாகுபாடின்றி ஒருமித்து நிறைவேற்ற கட்சிகள் இயல்பாக முன்வர வேண்டும். இதே போல குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.
இதுவே, கட்சிகளின் செயல் திட்டமாக இருக்க வேண்டும். மக்கள் நலன் என்பது ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் வழங்குவதாகும். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அரசியல் பாகுபாடு, கருத்து வேறுபாடுகளை மறந்து மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications