சென்னையில் புதிதாக 5 அடுக்குமாடி தொழிற்பேட்டைகள்: அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி
சென்னை: சென்னையைச் சுற்றியுள்ள 5 இடங்களில் விரைவில் அடுக்குமாடி தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் நலச்சங்கத்தின் சார்பில் சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சியில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு அமைச்சர் பேசுகையில்,
கிண்டி, மாதவரம், திருமழிசை, பெருங்குடி உள்ளிட்ட சென்னையைச் சுற்றி இருக்கும் 5 இடங்களில் அடுக்குமாடி தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். இது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை முதல்வர் கருணாநிதியுடன் கலந்து பேசி தீர்வு காணப்படும்.
சிறு மற்றும் குறுந்தொழில்களை நம்பித் தான் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் உள்ளன. ஆகையால், சிறு மற்றும் குறுந்தொழில்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டுமே சிறு, குறுந்தொழில்களுக்கு கடன், மானியம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல சலுகைகளை அளித்துக் கொண்டிருக்கிறது. சுமார் 10 லட்சம் பேருக்கு திமுக ஆட்சியின்போது வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதற்கேற்ப இதுவரை 4 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் 200 பொற்கொல்லர்களுக்கு தாய்கோ வங்கியில் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்ப்பட்டது. இதில் முதல் கட்டமாக 50 பேருக்காவது ஜாமீன் தொகை எதுவும் இன்றி கடன் வழங்கப்படும்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைகளில் பேருந்துகள், வேன்கள் ஆகியவை நிறுத்தி வைக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக டான்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு பேருந்து, லாரி, வேன், கார் ஆகியவற்றை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படும். விரைவில் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என்று அவர் பேசினார்.
சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் நலச்சங்கத்தின் தலைவர் வே. நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications