முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜாமீன்!
ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடமலைக்குண்டில் கடந்த 25-ந்தேதி தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பேசிய அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் முதல்வர் கருணாநிதி, மத்திய மந்திரி மு.க.அழகிரி குறித்து அவதூறாகப் பேசினார்.
இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடிகர் எஸ்.எஸ்.சந்திரனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்போது தன்னை கைது செய்யாமல் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கோர்ட்டில் ஆஜராகும் போது உடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை தேனி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி சிவானந்தஜோதி முன்னிலையில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜரானார்.
அவருடன் அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் தங்கதமிழ் செல்வன், தேனி நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் வந்திருந்தனர். கோர்ட்டில் ஆஜரான நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.