வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் துஷ்பிரயோகம்-மறு பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் அளித்த உத்தரவில்,
அண்மைக்காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகவும் அதிகரித்து விட்டன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றில் பல வழக்குகள் உண்மைக்கு புறம்பானதாகவும், தவறான நோக்கத்துக்காகவும் தொடரப்படுகின்றன.
இது போன்ற வழக்குகளை கீழ் கோர்ட்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஒரு சில வழக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் கணவரது உறவினர்கள் மீதும், வீட்டுக்கு எப்போதாவது வரும் உறவினர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைகள் சம்பந்தப்பட்ட அனைவர் மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றன. நிரபராதிகள் என தீர்ப்பு வந்தாலும் வடுக்கள் மறைய வாய்ப்பில்லை.
கூறப்படும் குற்றச்சாட்டுகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதை கோர்ட்கள் ஆராய வேண்டும். பல வழக்குகளில் கணவன் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சுமத்தப்படும் புகார்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. உண்மை எது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.
சில சந்தர்ப்பங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய பின்னரும், உண்மை இதுதான் என தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. மக்களின் கருத்தைக் கேட்டு இந்த சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதற்கான நடவடிக்கைகளை தொடங்க இந்த தீர்ப்பின் நகலை மத்திய சட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆண்கள் அமைப்புகளை எதிர்த்து போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த சட்டத்தைக் கண்டித்து ஏற்காட்டில் நடந்த ஆண்கள் அமைப்பின் கூட்டத்தில் பேசப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.