பாக்.குக்கு இந்தியாவால் ஆபத்தில்லை, தீவிரவாதம்தான் பெரும் மிரட்டல்-ஐஎஸ்ஐ கண்டுபிடிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவால் பாகிஸ்தானுக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஆனால் தீவிரவாதிகளும், தீவிரவாத இயக்கங்களும்தான் பாகிஸ்தானுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளன என்று பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிதாக ஞானோதயம் வந்து கூறியுள்ளது.
கடந்த 63 ஆண்டு கால பாகிஸ்தான் வரலாற்றில் இப்போதுதான் இந்தியா எதிரி இல்லை என்று முதல் முறையாக ஐஎஸ்ஐ கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்றை ஐஎஸ்ஐ அரசுக்கு அனுப்பியுள்ளது. அதில், இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானுக்கு ஆபத்து ஏதும் இல்லை. மாறாக பெருகி வரும் தீவிரவாதமும், தீவிரவாத இயக்கங்களும்தான் பெரும் மிரட்டலாக உருவெடுத்துள்ளன என்று ஐஎஸ்ஐ தெரிவித்துள்ளதாம்.
இருப்பினும் இந்த அறிக்கைக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசின் ஆதரவு உள்ளதா என்பது தெரியவில்லை.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புதான் இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டி விட்டும், வளர்த்தும், தீவிரவாத செயல்களை நிகழ்த்தியும் வருவதாக நீண்ட காலமாகவே இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. மேலும், ஐஎஸ்ஐ அதிகாரிகள் பலருக்கும், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவும் கூட சமீப காலமாக கூற ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவால் நமக்கு ஆபத்தில்லை என்று பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கூறியிருப்பது வியப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications