தயாநிதி மாறன் வீட்டில் சக வீரரை கொன்ற சிஆர்ப்எப் வீரருக்கு ஆயுள் தண்டனை
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் சுரேஷ் குமார் மற்றும் கான்ஸ்டபிள் கணேஷ் பாண்டுரங்க சுதர் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கணேஷ் துப்பாக்கியால் சுட்டதில் 8 குண்டுகள் பாய்ந்து சுரேஷ் குமார் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கில், கணேஷ் பாண்டுரங்க சுதருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் நேற்று தீர்ப்பளித்தார்.
19 மாதங்களில் 170 ராணுவ வீரர்கள் தற்கொலை:
இந் நிலையில் கடந்த 19 மாதங்களில் 170 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 2009ம் ஆண்டில் மட்டும் 111 ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் ஜூலை மாதம் வரை 59 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்களைத் தடுக்க விடுமுறை எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துதல், ராணுவ வீரர்களுக்கு அவரவர் மதங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களைக் கொண்டு கவுன்சிலிங், ஜவான்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் மற்றும் உணவின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.