மதானியைக் கைது செய்த பெங்களூர் போலீஸாருக்கு கொல்லம் கோர்ட் சம்மன்
கொல்லம் : அப்துல் நாசர் மதானியைக் கைது செய்து சென்ற கர்நாடக போலீஸார் மீது கொல்லம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானியை கேரளாவில் உள்ள அன்வர்சேரியில் கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து பெங்களூர் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், கொல்லம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மதானியின் சகோதரர் அப்துல் சலாம் நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் வாரண்ட் மூலம் கைது செய்யப்படும் ஒருவரை 30 கிமீக்கு அப்பால் அழைத்து செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற வேண்டும்.
கிரிமினல் சட்டம் 81வது பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த விதீமுறையை கர்நாடக போலீசார் மீறிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சவுந்திரேசன், மதானியை கைது செய்த பெங்களூரு போலீசாருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.