நாகை-வேளாங்கண்ணி ரயில்: மம்தா பானர்ஜிக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: நாகப்பட்டிணம்-வேளாங்கண்ணி இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில், வேளாங்கண்ணியில் திருவிழா தொடங்குவதற்கு முன், ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் எல்லா நிலைகளிலும் முடிவடைந்து, ரயில் சேவை தொடங்கப்படுவதற்கு தயாராக உள்ளது என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, இந்த பாதையில் ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழா நடைபெறும் நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், வேளாங்கண்ணிக்கு வருவார்கள். எனவே, புதிய பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால், பக்தர்களுக்கு அது பெரிதும் பயனளிப்பதாக அமையும்.
எனவே, இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி, வேளாங்கண்ணியில் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே, அந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழக மக்களின் நீண்ட கால விருப்பமான, இந்த கோரிக்கையை மீது தாங்கள் தனிக்கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.