தமிழக காங்கிரஸ் சரியாக செயல்படவில்லை-கார்த்தி சிதம்பரம்
சென்னை: தமிழகத்திற்கு ஏற்ற கட்சியாக, உகந்த அரசியல் கட்சியாக காங்கிரஸ் செயல்படவில்லை என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ கோஷ்டித் தலைவராக உருவாகி வரும் கார்த்தி சிதம்பரம்.
சென்னை புரசைவாக்கத்தில் நடந்த மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசும்போதுதான் இப்படிக் கூறினார் கார்த்தி.
அவர் கூறுகையில்,
மாவோயிஸ்ட் பிரச்னை, காஷ்மீர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, பள்ளிகளுக்கான கல்வி கட்டணப் பிரச்னை போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் கருத்து தெரிவிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விலகி நிற்கிறது. அதனால் காங்கிரஸின் நிலை மக்களுக்கு தெரிவதில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து காங்கிரஸ் கட்சி அதிகமாக பேசாததால் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல பிரசாரம் செய்கிறார்கள்.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்த கட்சி காங்கிரஸ் மட்டுமே. 1987ல் ஏற்பட்ட ராஜீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றிருந்தால் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைத்திருக்கும். அதனை விட்டுவிட்டு ஆயுதப் போராட்டம் நடத்தியதால் தமிழர்களுக்கு அழிவு ஏற்பட்டது.
வரப்போகும் தேர்தல்களில் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியை இழக்கப் போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் பழங்குடி மக்களை திசைதிருப்பி ஆயுதங்கள் மூலம் அரசாங்கத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள்.
வளர்ச்சி இல்லை அதனால் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்று மாவோயிஸ்டுகளை எழுத்தாளர்கள் ஆதரிக்கிறார்கள். அமைதி இருந்தால் தான் வளர்ச்சி ஏற்படும் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு நல திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் செயல்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக தமிழகத்தில் ஓடும் சொகுசு பஸ்கள் அனைத்தும் மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டதாகும்.
இது பற்றி காங்கிரஸ்காரர்கள் மக்களிடம் பிரசாரம் செய்யாததால் மாநில அரசு பெயரை தட்டிச் செல்கிறது. அதற்காக நான் திமுகவைக் குறைகூறவில்லை. நாம்தான் நமது சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரம் ஆதரவாளர்களான வள்ளல்பெருமான், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.