தூத்துக்குடி: விசைப்படகு மீனவர்கள் 6வது நாளாக ஸ்டிரைக்-கோடிக்கணக்கில் இழப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப் படகு உரிமையாளர்களின் முடிவை மீனவர்கள் ஏற்க மறுத்துவிட்டதால் 6வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விசைப் படகு மீனவர்கள் பங்கு தொகையை 35 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 13ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் 250க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் 3,000 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறைமுகமாக வேலை இழந்துள்ளனர்.
மேலும் தற்போது கணவாய் மீன் சீசன் காலமாக இருப்பினும் கூட விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்வரத்து அடியோடு முடங்கியுள்ளது.
இதனால் மீன்பிடித்தல், மீன் சார்பு தொழில்களும் அடியோடு முடங்கியுள்ளன. இந்த ஸ்டிரைக்கால் மாவட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் விசைப்படகு தொழிலாளர்களுக்கு தினசரி வழங்கும் பேட்டா ரூ.300ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்து வழங்குவது எனவும், இதனை ஏற்க மறுக்கும்பட்சத்தில் மீனவர்களுக்கான லாப பங்கீட்டை 35 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த மீனவர்கள் லாப பங்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தி இருப்பதை ஏற்று கொள்கிறோம். ஆனால் ரூ.300 முதல் ரூ.500 வரை பேட்டா வழங்குவது தற்போது இருப்பதுதான். மேலும் பேட்டைவை ரத்து செய்துவிட்டு இந்த பங்கு தொகையை தருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது என்று கூறிவிட்டனர்.
இதனால் வேலை நிறுத்தம் தொடர்ந்து கொண்டுள்ளது.