ரூ. 200 கோடி கட்டாமலேயே தூத்துக்குடி ஸ்டெர்லைட் துணை தலைவர் விடுதலை
தூத்துக்குடி: ரூ. 200 கோடி கட்டினால் ஜாமீன் கிடைக்கும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த நிபந்தனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து ரூ. 200 கோடி கட்டாமலேயே ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன துணைத் தலைவர் வரதராஜன்.
கடந்த ஜூலை மாதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தாமிரத் தாது இறக்குமதி செய்ததில் ரூ 750 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, தம்மை ஜாமீனில் விடுவிக்க கோரி வரதராஜன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஆராய்ந்த நீதி மன்றம், மனுதாரர் ரூ 200 கோடி ரூபாயை நெல்லை கஸ்டம்ஸ் கமிஷனர் அலுவலகத்தில் டெபாசிட்டாக செலுத்தினால், ஜாமீன் வழங்கப்படும் என நிபந்தனை விதித்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரதராஜன் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் தொகை இல்லாமல் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.