சென்னை அருகே 20 ஜோடி அதிமுகவினருக்கு கல்யாணம்-ஜெ. நடத்தி வைக்கிறார்
சென்னை: சென்னை அருகே 20 ஜோடி அதிமுகவினருக்கு வருகிற 22ம் தேதி கல்யாணம் நடைபெறுகிறது. இதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத்- நிவேதிதா திருமணம், தேனி எம்.எல்.ஏ. ஆர்.டி.கணேசன் மகள் திருமணம், முன்னாள் எம்.பி. கோவிந்தராஜூலு இல்ல திருமணம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. மகேந்திரன் இல்ல திருமணம், திருவொற்றியூர் ராஜேந்திரன் இல்ல திருமணம், வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி ஜெயலலிதா பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன் மகன் ராஜா-பொற்பாவை ஆகியோரின் திருமணம் உள்பட 20 ஜோடி திருமணங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடத்தி வைத்து பேசுகிறார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து அ.தி.மு.க. பிரமுகர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதால் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு வருகிறது.
பொதுக்கூட்டம், மாநாட்டுக்கு செய்வதைப் போல இந்த கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்கின்றனர். இதனால் வானகரம் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.