'பிரதமரானார்' லாலு!-காங்கிரஸ் கூட்டணி அரசை கலைத்தார்!
கூடுதல் ஊதிய உயர்வு கேட்டு மக்களவையில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் மசோதா உள்ளிட்ட 2 முக்கிய மசோதாக்கள் மக்களவையில் எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை துணைத் தலைவர் கரிய முண்டா அவையை ஒத்திவைப்பதாக அறிவித்துச் சென்றார். ஆனால், அவை ஒத்தி வைக்கப்பட்டபோதும் பாஜக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாடி கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
திடீரென மத்திய அரசை கேலி செய்யும் வகையில் மக்களவை போட்டிக் கூட்டத்தையும் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பிரதமராக லாலு பிரசாத் யாதவும், பாஜக எம்பி கோபிநாத் முண்டே சபாநாயகராகவும் செயல்பட்டனர். அவையை சுமுகமாக நடத்தும் பொறுப்பு முலாயம் சிங் யாதவிடம் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் 70 எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில் மேனகா காந்தி உள்பட பலர் பேசினர்.
அப்போது இடைமறித்த லாலு, ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசை இந்த அரசு 'டிஸ்மிஸ்' செய்கிறது. மேலும் அந்த அரசு இன்று காலை நிறைவேற்றிய இரு மசோதாக்களையும் ரத்து செய்கிறது என்றார்.
சுமார் ஒரு மணி நேரம் 'அவையை நடத்திவிட்டு' வெளியே வந்த லாலு நிருபர்களிடம் பேசுகையில், இப்போதைய மத்திய அரசு ஜனநாயகரீதியாக செயல்படாததால் 'மக்கள் அரசு' அமைக்கப்பட்டுள்ளது. நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்றார் நகைச்சுவையாக.