மேலிட கட்டளையை மீண்டும் மீறுகிறார் ஜெகன் மோகன்-யாத்திரையை தொடர்கிறார்
ஹைதராபாத்: காங்கிரஸ் மேலிடக் கட்டளையை மீண்டும் மீறுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. தனது தந்தைக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் யாத்திரையை மீண்டும் அவர் தொடங்குகிறார்.
செப்டம்பர் 3ம் தேதி முதல் இந்த யாத்திரை மீண்டும் தொடங்குகிறதாம். பிரகாசம் மாவட்டத்திலிருந்து யாத்திரையை தொடருகிறார் ரெட்டி. இந்த யாத்திரையை தொடர்ந்தால் கடும் ஒழுங்கு மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மூத்த தலைவரான நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள எச்சரிக்கையை ஜகன் மோகன் ரெட்டி தூக்கி தூர எறிந்து விட்டாராம்.
செப்டம்பர் 2ம் தேதி ஜெகன் மோகனின் தந்தையான முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் முதலாமாண்டு நினைவு தினம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இடையில் நிறுத்தி வைத்திருந்த யாத்திரையை மீண்டும் தொடங்குகிறார் ஜெகன் மோகன்.
கடந்த மே மாதம் தெலுங்கானா பகுதியில், ஜெகன் மோகன் நடத்திய யாத்திரையின்போது பெருமளவில் வன்முறை வெடித்தது. ஜெகன் மோகன் வருகையை எதிர்த்து தெலுங்கானா ஆதரவு கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் குதித்ததால் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து தனது யாத்திரையை அப்பகுதிகளில் தொடரவில்லை ஜெகன் மோகன். இந்த யாத்திரை கூடாது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியும் கூட அதை மீறி கலந்து கொண்டார் ஜெகன் மோகன்.
ஆந்திர முதல்வர் பதவியை அடைய கடுமையாக மோதிக் கொண்டிருக்கிறார் ஜெகன் மோகன். ஆனால் காங்கிரஸ் மேலிடமோ, போதிய அனுபவம் பெறாமல் அப்பதவியில் நியமிக்க முடியாது என ஜெகன் மோகனிடம் திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஜெகன் மோகன், யாத்திரை என்று கிளம்பி ஆதரவை திரட்டி வருகிறார்.
ஜெகன் மோகனின் இந்த நடவடிக்கையை இரங்கல் தெரிவிக்கும் யாத்திரையாக காங்கிரஸ் மேலிடம் பார்க்கவில்லை. மாறாக, எம்.எல்.ஏக்களின் ஆதரவைத் திரட்டி முதல்வர் ரோசய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும்
முயற்சியாகவே பார்க்கிறது. இதன் காரணமாக, சிரஞ்சீவியின் ஆதரவைப் பெற்று தனது நிலையை அது ஸ்திரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே செப்டம்பர் 2ம் தேதி திருப்பதியில் பொதுக் கூட்டத்தில் பேசப் போவதாக ஜெகன் அரி்வித்துள்ளார். இதை முடித்து விட்டு அடுத்த நாள் யாத்திரையை தொடர்கிறார்.