டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மும்முனை போராட்டம்-டாக்டர் கிருஷ்ணசாமி
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக் கோரி மும்முனைப் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வீடுகட்ட 3 சென்ட் நிலம், ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம், ஆகிய தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழகத்தில் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் பொதுமக்கள் பெருமளவு வருமானம் அரசால் சுரண்டப்படுகிறது. தொழில், கல்வி, விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தென்தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
எனவே இலவச நிலம் வழங்க கோரியும், டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக்கோரியும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் தென்தமிழகத்தின் கல்வி, தொழில் வளர்ச்சி, விவசாய உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மும்முனை போராட்டம் தொடரும்.
வருகிற செப்டம்பர் 6ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடைபெறும். மேலும் அக் 6ம் தேதி மறியல் போராட்டமும், 8ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் ஆகிய மும்முனை போராட்டம் நடைபெறும் என்றார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் டாஸ்மாக் வசம் மதுக் கடைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் அவர் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.