பாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்
பாலக்காடு அருகே உள்ள எலவஞ்சேரி என்ற இடத்தில் தரூரின் மூதாதையர் இல்லம் உள்ளது. அங்கு இன்று காலை இந்த திருமணம் நடந்தது. இந்து, மலையாள முறைப்படி, நாதஸ்வரம் ஒலிக்க, மங்கள மேளம் முழங்க எட்டரை மணியளவில் சுனந்தா கழுத்தில் தாலி கட்டினார் சசி தரூர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் மலையாளப் பெண்கள் அணிவதைப் போல, வேஷ்டி, முண்டு அணிந்திருந்தார் சுனந்தா.
இதில் இரு தரப்பையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு தரூரின் தாய் வழிப்பட்டியான 94 வயது ஜெயசங்கரி அம்மாவிடமும், குடும்பத்து மூத்தவர்களிடமும் இருவரும் ஆசி பெற்றுக் கொண்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் தம்பதி சமேதராக திருவனந்தபுரம் செல்கின்றனர் சுனந்தாவும்,சசியும். அங்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொச்சி ஐபிஎல் அணி ஏல ஊழல் விவகாரத்தின்போதுதான் தரூர், சுனந்தாவின் காதல் குறித்து வெளியே தெரிய வந்தது. அன்று முதல் இருவரும் மீடியாக்களின் வெளிச்சத்தில் தொடர்ந்து இருந்து வந்தனர். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இன்று கல்யாணம் முடிந்துள்ளது.
48 வயதான சுனந்தா கணவரை இழந்தவர், 54 வயதான சசி தரூர் விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுனந்தா துபாயில் வசித்து வருபவர்.