வீட்டில் மின்சாரம் பாய்ச்சி கல்லூரி மாணவியை சிறைவைத்த நபர்!
கோபி: கோபிசெட்டிப்பாளையம் அருகே வீட்டுக்குள் நுழைந்து மாணவியைக் கட்டிப் போட்டு, அவர் தப்பிவிடாமல் தடுக்க கதவு, ஜன்னலில் மின்சாரம் பாய்ச்சிய நபர் கைது செய்யப்பட்டார்.
கோபி அருகே தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபழனிச்சாமியின் (47), மனைவி பத்மாவதி, மகள் தேவகி. தேவகி கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் அருகே வசி்ப்பவர் மகாதேவன் (32). இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை சின்னபழனிச்சாமி வீட்டுக்குச் சென்ற மகாதேவன், அங்கு தனியே இருந்த தேவகியை கத்தியைக் காட்டி மிரட்டி சிறை பிடித்து, கட்டிப் போட்டார்.
தேவகி தப்பிவிடாமல் தடுக்கவும், அவரை யாரும் காப்பாற்ற முடியாமல் தடுக்கவும் கட்டுக் கம்பியால் கதவு, ஜன்னல் பகுதியிலும் வலை போல் கட்டிவிட்டு அதில் மின்சாரத்தை பாய்ச்சிவிட்டு அரிவாளுடன் தேவகி அருகே நின்றார்.
இது குறித்து அறிந்த சின்னபழனிச்சாமி கோபி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மகாதேவனுடன் பேச்சு நடத்தினர்.
ஆனால், அவர் தொடர்ந்து முரண்டு பிடித்தார். இதையடுத்து தேவகியை மீட்க சிவகுமார் என்பவர் முயற்சி செய்தார். அவரை மகாதேவன் அரிவாளால் வெட்டிதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீசாரும், அதிவிரைவுப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
போலீசார் உள்ளே வந்தால் தேவகியை வெட்டிக் கொல்வேன் என்று மகாதேவன் மிரட்டியதால் கோட்டாட்சியர் மணிமேகலை, வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து பேச்சு நடத்தினர்.
பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தேவகியை விடுவித்தார் மகாதேவன். இதையடுத்து மகாதேவன் கைது செய்யப்பட்டார்.