மழையால் சுகாதார சீர்கேடு-மலேரியா, எலிக் காய்ச்சல் பரவுகிறது
சென்னை: தேங்கிக் கிடக்கும் நீர், சாலைகளில் பெருகி வழியும் குப்பைகள், பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தில் மலேரியாவும், எலிக் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இவை சென்னையில் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மோசமடைந்திருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கூடுதல் பிரச்சினைகளையும் கொண்டு வந்து விட்டுள்ளது.
பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஏற்கனவே பெய்த மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் காலி மனைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் உள்ளே போக பல நாட்களாகிறது. இதன் காரணமாக கொசுக்கள் பெருகியுள்ளன.
இதுதவிர கழிவு நீரும் பல இடங்களில் சாலைகளிலேயே ஓடுகின்றன. குப்பைகளும் பெருகிப் போய்க் கிடக்கின்றன. எல்லாம் சேர்ந்து இப்போது மலேரியா, எலிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்துள்ளன.
இதுகுறித்து அரசு பொது மருத்துவமனை உள் சிகிச்சை துறை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 2 வாரங்களில் மலேரியா மற்றும் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கு வருவோரின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சாதாரண வைரஸ் காய்ச்சல் தவிர இதுபோன்ற சீசனல் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
நோய்த் தாக்குதல் சாதாரணமாக இருப்பவர்களுக்கு இளைப்பு, தொடர் இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. அதீதமாக தாக்கப்படுவோருக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் மாசுதான் இதற்கு முக்கியக்காரணம். தாழ்வான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் மலேரியா, எலிக்காய்ச்சல் போன்றவை பரவுகின்றன.
தற்போது பெய்து வரும் மழை நின்றதும் மலேரியா பெருமளவில் பரவும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல எலிக்காய்ச்சலும் பெருகும் அபாயம் உள்ளது என்றார்.
இதேபோல வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வயிற்றுப் போக்கு பரவி வருகிறது.
சென்னை தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழையால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மழை காரணமாக பரவும் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாம். அதேசமயம், கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் மட்டும் 3000 பேருக்கு மழையால் ஏற்படும் நோய்கள் தாக்கியுள்ளன.