ஊழல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், உயர்நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்காமல் உமாசங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் அது தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஜூன் 14ம் தேதி தான் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை திருத்தி நேற்று நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவில், ஜூன் 14ம் தேதி இதே கோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவில் திருத்தம் செய்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இருப்பினும் மனுதாரர் தொடர்ந்துள்ள ரிட் மனு மீதான இறுதி தீர்ப்புக்கு இந்த விசாரணை நடவடிக்கைகள் கட்டுப்பட வேண்டும். மேலும், விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும். கோர்ட் அனுமதி இல்லாமல், உத்தரவில்லாமல் மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் அளித்துள்ள உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.