நாட்டை அடகு வைக்க காங்கிரஸ் தயராகிவிட்டது-நல்லகண்ணு தாக்கு
சேலம்: இந்தியாவை அயல்நாட்டவரிடம் அடகு வைக்கும் நிலைக்கு மத்திய அரசு சென்று விட்டது. நாட்டையும், மக்களையும் காக்க எத்தகைய போராட்டங்களையும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரம் அரியாக்கவுண்டம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்ட குழுவிற்கு கார் வழங்கும் விழா, ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கலந்து கொண்டு பேசியதாவது,
கடந்த 9 -ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம் குடியுரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், பட்டா வழங்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது.
அடுத்த கட்டப் பேராட்டமாக, செப்டம்பர் 7 -ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. மற்றும் காங்கிரஸ் கட்சித் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி.-யும் கலந்து கொள்கிறது.
விலைவாசி உயர்வுக்காக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலமுறை மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டது. ஆனால், மத்திய அரசு இதனை மதிக்கவில்லை. மாறாக விலைவாசியை உயர்த்திக் கொண்டே போகிறது.
முதலாளி வர்க்கமான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசாக மன்மோகன்சிங் அரசு செயல்படுகிறது. மத்திய அரசுக்கு ஏழை, எளிய மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.
இந்தியாவில் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்து விட்டது. மும்பையில் ஒரு சதுர அடி நிலம் ரூ.8,500 ஆகும். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ. 100 ஆக இருந்தது. இன்று ரூ.13,000 ஆக உள்ளது. தமிழகத்தில் நிலக்கொள்ளை, மணல் கொள்ளை நடந்து வருகிறது.
அயல்நாட்டவரிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு மத்திய அரசு சென்று விட்டது. நாட்டையும், மக்களையும் காக்கும் கடமை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உண்டு. அதற்காக எத்தகைய போராட்டங்களையும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications