Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பணக்காரர்களுக்கே சாதகமாக உள்ள மன்மோகன் அரசு'-அய்யர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கை, ஏழை, எளிய மக்களுக்கு சாதகமானதாக இல்லை. மாறாக பணக்காரர்களுக்கே சாதகமாக உள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான மணிசங்கர அய்யர்.

சமீபத்தில் காமன்வெல்த் போட்டிகளை கடுமையாக சாடிப் பேசியிருந்தார் அய்யர். இந்த நிலையில், மன்மோகன் சிங் அரசின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடந்த 12வது பி.எஸ். பார்க்கர் நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

நாட்டின் 158 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதிகளின் (நக்ஸல்களின்) பிடியில் சிக்கியிருக்கின்றன. அவற்றில் 35 மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இல்லாமல் நழுவிவிட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கிறார். மேலும் 123 மாவட்டங்கள் அப்படி நக்ஸல்களின் பிடிக்குள் செல்லத் தயாராக இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.

நக்ஸல்களின் போதனையால் நாட்டின் சரிபாதி இப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் புரட்சிக் குரல்களை எழுப்பி வருகின்றன. நக்ஸல்கள் தங்களுடைய செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள கையாளும் தந்திரங்கள் நம்மால் ஏற்க முடியாதவைதான், ஆனால் அவர்களுடைய செல்வாக்கு பரவிய மாவட்டங்களில் நம்முடைய அரசு நிர்வாகமே அடையாளம் தெரியாமல் மறைந்தே விட்டதே?

மத்திய திட்டக்குழுவில் உள்ளவர்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவீதம் என்பதை மட்டுமே மூல மந்திரமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அதை எப்படி அமல் செய்வது, அதன் பலனை யார் அனுபவிப்பது என்பதில் எல்லாம் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.

இதன் விளைவாகவே நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வளர்ச்சியாக இல்லாமல், பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களாக கொழுக்கும் வளர்ச்சியாக உருவெடுத்துவிட்டது.

இப்போதுள்ள அரசின் திட்டங்களால் எந்த அளவுக்கு விரைவாக வளர்ச்சியை எட்டுகிறோமோ அந்த அளவுக்கு விரைவான ஏற்றத்தாழ்வையும் அடைகிறோம்.
நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வரும் அதே வேளையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளின் எண்ணிக்கையும் அதே வேகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பொருளாதார ஆலோசகராக இருக்கும் எஸ்.ஆர். டெண்டுல்கர் போன்றவர்களுக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம்தான் முக்கியமே தவிர அனைத்து தரப்பினரும் அடையும் வளர்ச்சியில் அக்கறை இல்லை.

நம் நாட்டிலிருந்து இரும்புத்தாதை அதிக அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய நம் நாட்டு அரசு அதிகாரிகள் அனுமதித்தார்கள். விளைவு, சீனா வெகு வேகமாக அதைக் கொண்டு தொழில்வளர்ச்சி கண்டது, நமக்கு மிகக்குறைந்த அளவே அதில் வருமானம் கிட்டியது. இப்போதுதான் அரசு விழித்துக் கொண்டு இரும்புத்தாது ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கிறது.

ஒரிசாவில் படிப்பறிவில்லாத, கந்தை ஆடை உடுத்தியுள்ள, அழுக்குப்படிந்த பழங்குடிகளிடமிருந்து கனிம வளம் நிறைந்த நிலத்தை அடிமாட்டு விலையில் வாங்கி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிடலாம் என்று கணக்கு போட்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் கூட்டாகச் செயல்பட்டனர்.

சுற்றுச்சூழலியலாளர்கள் எச்சரித்ததை அரசு அலட்சியம் செய்தது. இப்போது ஆயுதம் தாங்கிய பழங்குடிகள் எதிர்க்கத் தொடங்கிய பிறகே அரசு எச்சரிக்கை அடைந்திருக்கிறது.

கடந்த ஆட்சியில் விவசாயக் கடனால் தற்கொலை செய்துகொண்ட லட்சக்கணக்கான விவசாயிகள் அரசுடைமை வங்கிகளில் வாங்கியிருந்த 70,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்தபோது நாடு முழுக்க பலத்த கண்டனம் எழுந்தது.

இப்போதோ 10 நாள்கள் மட்டுமே நடந்து முடியவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக டெல்லி நகரில் மட்டும் 70,000 கோடி ரூபாயைச் சூறைவிடுகிறது அரசு.

கடந்த 15 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், அடிப்படை சமூகத் தேவைகளுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி 15 மடங்குக்கும் மேல் அதிகரித்திருக்கிறது, ஆனால் மனித ஆற்றல் வளர்ச்சியில் இந்தியாவுக்குக் கிடைத்திருப்பதோ 134-வது இடம்தான்.

நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளும், திட்டமிடலும், திட்ட அமலும் சரியாக இல்லை என்பதையே இவையெல்லாம் உணர்த்துகின்றன என்றார் அய்யர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+