தனியார் மருத்துவமனை மருந்து அலர்ஜியால் பெண் சாவு
சென்னை : தனியார் மருத்துவமனையில், சாதாரண காய்ச்சல், இருமல் காரணமாக சிகிச்சை எடுக்கச் சென்று மருந்தால் அலர்ஜிக்குள்ளாக்கி உடல் முழுவதும் கொப்புளம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த தையல் தொழிலாளி, ராம்நாத் (30). இவரது மனைவி குணசுந்தரி (21). இவர்களுக்கு 2 மாத ஆண் கைக்குழந்தை உள்ளது. குணசுந்தரி கடந்த மாத இறுதியில் காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அவர் நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார். அந்த மருத்துவமனை டாக்டர்கள் சிபாரிசு செய்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்த அவருக்கு அலர்ஜியால் உடல் முழுவதும் சிறிய, சிறிய கொப்பளங்கள் ஏற்பட்டு உடல் புண்ணானது.
அவருடைய முகம் மிகவும் கோரமாக மாறிப் போனது. கண் பார்வையும் மங்கியது. அவரால் தனது குழந்தைக்குத் தாய் பால் கூட கொடுக்க முடியவில்லை. உடல் வலியாலும், மனவலியாலும் பாதிக்கப்பட்ட அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் அவரது கணவர் ராம்நாத் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குணசுந்தரி கடந்த 6-ந் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம் என்ற ஒவ்வாமை நோய் ஏற்பட்டு இருப்பதாக கூறினர்.
இதையடுத்து குணசுந்தரியைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி எடுத்து சிகிச்சைகளைத் தொடங்கினர். இதன் பலனாக சற்று குணமடையத் தொடங்கினார் குணசுந்தரி.
இந்த நிலையில், அவருக்கு கடந்த 22-ந் தேதி வலிப்பு நோய் ஏற்பட்டது. கூடவே உணவுக்குழாய்க்கு செல்ல வேண்டிய உணவு மூச்சுக்குழாயில் இறங்கியதால் அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவசர சுவாச கவசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் நேற்று பிற்பகலில் குணசுந்தரிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக முயன்றனர். இருப்பினும் குணசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பழனி கூறுகையில், குணசுந்தரி நன்றாக குணம் அடைந்து வந்தார். அவரே எழுந்து நடமாடி சாப்பாடு சாப்பிட்டு வந்தார். ஆனால் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவர் மரணம் அடைந்தார் என்றார்.
மனைவி இறந்த தகவல் அறிந்ததும் அவரது கணவர் ராமநாத் கதறித் துடித்தார். இதனால் மருத்துவமனையே சோகமடைந்தது.