சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பு: அக்டோபரில் இறுதி விசாரணை- சுப்ரீம் கோர்ட்
சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து தமிழக அரசு அமைத்த நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து அறிக்கை அனுப்பியது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலாவின் உறவினரான இளவரசி உள்ளிட்டோரை பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனம் தலித் நிலத்தில் எஸ்டேட் கட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலாவின் உறவினர்களான சித்ரா மற்றும் இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிபதிகள் செளகான், சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா ஆஜராகி, நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையில் அந்த நிலம் ஆதி திராவிடர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிந்தவுடன், அந்த நிலங்களை ஆதி திராவிடர்களுக்கு திருப்பி வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், எனவே சசிகலாவின் உறவினர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
இளவரசி, சித்ரா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கூடுதலாக மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதற்கு நீதிபதிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
மேலும் வரும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்கும் என்று அறிவித்து, வழக்கை ஒத்தி வைத்தனர்.