உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
டெல்லி: உயர் நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) பேசியதாவது,
உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி அளி்க்க வேண்டியும், தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக் கோரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் டெல்லியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிப்பது தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக துரிதமாகச் செயல்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இதற்கு ஏன் காலதாமதம் ஆகிறது என்று தான் எனக்குப் புரியவில்லை.
அரசு நிர்வாகம் மற்றும் நீதி நிர்வாகங்களில் பயன்படுத்தும் வகையில் அரசமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் ராஜா.
திருச்சி சிவா (திமுக):
நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கூறி மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இப்போது அது மத்திய உள்துறையின் பரிசீலனையில் இருக்கிறது. இந்தப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும்
உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஹிந்தி தான் வழக்காடும் மொழியாக உள்ளது. ஆனால், மேற்கு வங்க அரசு இது தொடர்பாக முன் வைத்த கோரிக்கையை மட்டும் மத்திய அரசு தள்ளுபடி செய்துவிட்டது என்றார்.
பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக):
மாநில நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் பேச சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களை தங்களது தாய் மொழியில் வழக்காட அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசு அனுப்பிய பரிந்துரையை கிடப்பில் போடாமல் உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதலைப் பெற வேண்டும் என்று மனோஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications