பெற்றோர் எதிர்ப்பை மீறி விவசாயியை கரம் பிடித்த எம்.பி.ஏ பட்டதாரி பெண்
பாவூர்சத்திரம்: பெற்றோர் எதிர்ப்பையும் மீறி விவசாயியை கைப்பிடித்துள்ளார் எம்.பி.ஏ. பட்டதாரி பெண்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள மலையராமபுரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகள் லதா. எம்.பி. ஏ. பட்டதாரி. இவரும் அரியபுரம் வைரவன் என்பவரின் மகன் ஜெயமாரி என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஜெயமாரி விவசாயம் பார்த்து வருகிறார்.
இவர்கள் காதல் விவகாரம் ஜெயமாரி வீட்டுக்கு தெரிய வந்தது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மகன் விரும்பிய பெண்ணையே மணம் முடித்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்கிடையே தனது மகளை கடத்திச் சென்று வி்ட்டதாக முத்தையா பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்.ஐ. ஆடிவேல் ஆகியோர் விசாரணை நடத்தி காதல் ஜோடியை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இது போல் இரு வீட்டாரும் வரவழைக்கப்பட்டனர். அங்கு சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது முத்தையா எங்களை மீறிச் சென்ற மகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் போட்ட நகைகளை வாங்கித் தந்து விடுங்கள் என்று பிடிவாதமாக கூறினர். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதை தொடர்ந்து லதா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தார். காதலன் ஜெயமாரி லதாவை பதிவு திருமணம் செய்து தனது சொத்துகளை அவரது பெயரில் எழுதி வைப்பேன் என்றும், அவரை கண்கலங்காமல் பார்த்து கொள்வேன் என்றும் போலீசாரிடம் உறுதியளித்தார்.
அதன்பிறகு பாவூர்சத்திரம் அருகே உள்ள வென்னிமலை முருகன் கோவிலில் அவர்கள் திருமணம் நடந்தது.












Click it and Unblock the Notifications