தமிழக சட்ட மேல்சபை தொகுதிகள் அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் அமையவுள்ள சட்ட மேலவைக்கான தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு அதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைகிறது. இதையடுத்து அதற்கான தொகுதிகள் நிர்ணயம்,தேர்தல் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார். இதில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகளான காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், பிராந்திய கட்சிகளான திமுக, அதிமுக, பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள தொகுதி வரைவுப் பட்டியலும் வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வரைவுப் பட்டியல் விவரம்...
மேலவைக்கு எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் மூலமாகவும், கவர்னர் நியமனம் மூலமாகவும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 78 மேலவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 மேலவை உறுப்பினர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் 26 உறுப்பினர்களும், ஆசிரியர்கள் மூலம் 7 உறுப்பினர்கள், பட்டதாரிகள் மூலம் 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். கவர்னர் 12 உறுப்பினர்களை நியமனம் செய்வார். சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் மூலம் 2 மேலவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கென்று 25 தொகுதிகளை தேர்தல் கமிஷன் வரையறை செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் 32 மாவட்டங்களை 25 தொகுதிகளாக பிரித்துள்ளனர். 7 மாவட்டங்களை மற்ற மாவட்டத்துடன் சேர்த்துள்ளனர்.
அந்த வகையில் பெரம்பலூர்-கடலூர், கரூர்-நாமக்கல், நீலகிரி-கோவை, தேனி-திண்டுக்கல், அரியலூர்-திருச்சி, திருவாரூர்-நாகை, ராமநாதபுரம்-சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு உள்ளன. இவை 7 தொகுதியாக கருதப்படும். மற்ற ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு தொகுதியாக கருதப்படும்.
ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளின் தொகுதிக்கென்று 7 தொகுதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, சென்னை, தமிழ்நாடு வடக்கு, தமிழ்நாடு வடக்கு-மத்தி, தமிழ்நாடு மேற்கு, தமிழ்நாடு கிழக்கு-மத்தி, தமிழ்நாடு தெற்கு-மத்தி, தமிழ்நாடு தெற்கு ஆகிய 7 தொகுதியாக பிரிக்கப்பட்டு உள்ளன.
சென்னை தொகுதிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் வருகின்றன. தமிழ்நாடு வடக்கு தொகுதிக்குள் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை; தமிழ்நாடு வடக்கு-மத்தி தொகுதிக்குள் விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்; தமிழ்நாடு மேற்கு தொகுதிக்குள் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர்; தமிழ்நாடு கிழக்கு-மத்தி தொகுதிக்குள் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர்; தமிழ்நாடு தெற்கு-மத்தி தொகுதிக்குள் திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்; தமிழ்நாடு தெற்கு தொகுதிக்குள் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகள் குறித்து இன்று அரசியல் கட்சிகளின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்கும். அதன் பின்னர் இறுதித் தொகுதிப் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications