திருப்பதி கோவில் ஊழியர் திடீர் தற்கொலை-ஊழல் பின்னணியில் நடந்ததால் பரபரப்பு
ஹைதராபாத் : திருப்பதி வெங்கடாலசபதி கோவில் ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பதி கோவிலில் பெருமளவில் ஊழல் புகார்கள் சரமாரியாக வந்துகொண்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நிர்வாக முறைகேடு, அர்ச்சனை டிக்கெட் ஊழல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமானதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தியது.
அர்ச்சனை டிக்கெட் விற்பனை ஊழல் குறித்து நடத்தப்படும் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவில் ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதற்கு தேவஸ்தான உயர் அதிகாரிகளே காரணம் எனக் கூறி, சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஆராய ஆந்திர முதல்வர் ரோசைய்யா திருப்பதி கோவிலுக்கு நேரில் விரைந்துள்ளார்.
தங்கக் காசுகளில் மோசடி:
இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டு வரும் தங்க நகைகளை, தங்கக் காசுகளாக மாற்றம் செய்வதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பதி கோவிலில் சாமிக்கு நேரிடையாக கொடுக்கப்படும் கிரீடம், பீடாரம் உள்ளிட்டவைகள் அவ்வாறாகவே பாதுகாக்கப்படும். உண்டியல் மூலம் கிடைக்கும் தங்க வளையல்கள், கம்மல்கள் உள்ளிட்ட அணிகலன்கள் வெங்கடாஜலபதி உருவம் பொறித்த தங்க காசுகளாக மாற்றப்பட்டு, கஜானாவிற்கு அனுப்பப்படும்.
இந்நிலையில் காணிக்கையாக வரும் தங்க நகைகளை, கோவில் நிர்வாகத்தில் உள்ள சிலர் எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக மலிவு உலோகத்தில் வெங்கடாஜலபதி உருவம் பொறித்த காசுகளை செய்து கஜானாவில் சேர்ந்து வரவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உருமாற்றம் செய்யப்பட்ட தங்க காசுகளை தணிக்கைக்கு உட்படுத்தப்படாததும் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரி சத்திய நாராயணா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய தங்கம், வைரம், வைடூரியம் ஆகியவை மாயமாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஊழல் ஊற்று பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் ஊழியர் தற்கொலையும் சேர்ந்து திருப்பதி கோவில் நிர்வாகத்தின் மீதான சந்தேகப் பார்வைகளை வலுப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications