தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து வரும் விஜயகாந்த்தின் வாக்கு வங்கி: திருமாவளவன்

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகளின் மண்டல செயற்குழு மாநாடு திருச்சியில் நடந்தது.
அதில் பேசிய திருமாவளவன்,
வரும் 2011ம் ஆண்டை விடுதலை சிறுத்தைகள் ஆண்டு என பிரகடனபடுத்தியிருக்கிறோம். நாம் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற வேண்டும். கடந்த 6 மாதத்தில் விடுதலை சிறுத்தை உறுப்பினர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.
அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் விடுதலை சிறுத்தைகள் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு தலித் மக்களும், சிறுபான்மை மக்களும் விடுதலைச் சிறுத்தை கட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அக்டோபர் 10ம் தேதி தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் எந்தக் கட்சியும் செய்யாத அளவுக்கு, இளைஞர்களைத் திரட்டி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சி விடுதலைச் சிறுத்தைகள் என்பதை நிரூபிக்கும் வண்ணம், சென்னை மெரீனா கடற்கரையில் இந்த மாநாடு நடைபெறும்.
தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மறுக்கின்றனர்.
1999ம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் அதன் வாக்கு வங்கி குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் 234 வேட்பாளர்களை நிறுத்தினார். இதில் 200 தொகுதிகளில் டெபாசிட் இழந்தார். ஒரு தொகுதியில் மட்டும் ஜெயித்தார். ஆனால் 8 சதவீத ஓட்டுக்களை பெற்றதாக கூறிக்கொள்கிறார்.
விடுதலை சிறுத்தைகளும் 200 தொகுதிகளில் போட்டியிட்டால் 12 சதவீதத்திற்கு மேல் ஓட்டுக்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அப்படி போட்டியிட விடுதலை சிறுத்தைகளிடம் பொருளாதார பலம் இல்லை.
ஆனால் அந்த நடிகரி்ன் கட்சியை திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக ஊடகங்கள் தூக்கிப் பிடித்து வருகின்றன.
சமீபத்தில் சோலை என்கிற எழுத்தாளர் கட்டுரை எழுதியிருந்தார். அவர் முதிர்ந்த அரசியல் எழுத்தாளர். அவர் தனது கட்டுரையில் திமுகவும், அதிமுகவும் தனக்கு அடுத்தப்படியாக வாக்கு வங்கிகள் கொண்ட கட்சி பாமக தான் என்று நம்பி ஏமாந்து போய்விட்டார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு வங்கி கொண்ட அடுத்த கட்சி என்று எழுதியிருக்கிறார்.
அதேபோல தமிழகத்தில் செல்வாக்கு உள்ள அரசியல் தலைவர் பட்டியலில் நான்காம் இடத்தை நமக்கு தந்திருக்கிறார்கள்.
இப்படி ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மாற்று சக்தியாக விடுதலைச் சிறுத்தைகளை ஏற்று கொள்ளாத நிலையிலும், தவிர்க்க முடியாமல் சிலர் பதிவு செய்கிறார்கள்.
சிலர் ஊழலை ஒழிப்பேன், வறுமையை ஒழிப்பேன் என்று சொல்கிறார்கள். இது கொள்கை அல்ல. அது ஒரு செயல் திட்டம், கொள்கை என்பது உழைக்கும் ஏழை-எளிய மக்களுக்கு ஒரு குடியரசை உருவாக்குவது.
ஒரு கட்சியை நடத்துபவர் தினந்தோறும் மக்களை 2 மணி நேரமாவது சந்திக்க வேண்டும். ஆனால் சில தலைவர்கள் அரை மணி நேரம் கூட ஒதுக்காமல் இருந்து வருகிறார்கள் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications