ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ரஜினிகாந்த் தனது மகள் கல்யாணத்திற்கு எனக்கு அழைப்பு வைக்க வந்தபோது அவருடன் அரசியல் பேசவில்லை. அதேபோல விஜயகாந்த் பிறந்த நாளின்போது அவருக்கு மாலை அணிவிக்கச் சென்றபோதும் அரசியல் பேசவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
முதல்வர் கருணாநிதியையும், திமுகவையும், திமுக அரசையும் தொடர்ந்து சாடிப் பேசி வந்தார் இளங்கோவன். இதனால் வெகுண்ட முதல்வர் கருணாநிதி, இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலியையே ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
மேலும், திமுக எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் தலைமை வகிக்கப் போவதாக செய்திகள் வந்ததைத் தொடர்ந்து பயந்து போன காங்கிரஸ், இளங்கோவனுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்து வாய்ப்பூட்டு போட்டது. இதனால் 'கூல்' ஆன திமுகவும், எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிரான கடுமையான நிலையை எடுக்காமல் அடக்கி வாசித்தது.
இருப்பினும் இளங்கோவன் வேறு ரூட்களில் சென்று திமுக தரப்பை தொடர்ந்து 'நோண்டி'க் கொண்டுதான் உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளன்று யாரும் எதிர்பாராத வகையில் தடாலடியாக அவரைப் போய்ச் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அத்தோடு நில்லாமல், தமிழக அரசியலில் வேகமாக வளரும் முக்கியமான அரசியல் தலைவர் என்றும் கூறி திமுக தரப்புக்கு எரிச்சலைக் கொடுத்தார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யா கல்யாணப் பத்திரிக்கையை கொடுப்பதற்காக இளங்கோவனை சந்தித்தார். இதையடுத்து இருவரிடமும் அரசியல் தொடர்பாக பேசினீர்களா என்று இளங்கோவனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கூறுகையில், டமாநிலங்களில் கட்சி பாகுபாடு பாராமல் தலைவர்கள் பழகி வருவதை போல தமிழகத்திலும் அந்த பண்பாடு உருவாக வேண்டும் என்று கருதி விஜயகாந்தை சந்தித்தேன்.
நான் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அப்போது நாங்கள் அரசியல் பேசவில்லை. கூட்டணி பற்றி பேச நேரம் உள்ளது. இதேபோல நடிகர் ரஜினிகாந்த் எனது இல்லம் வந்து அவரது மகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவரிடமும் நான் அரசியல் பேசவில்லை என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications