2 வார ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்ற மீனவர்கள்: படகுகள் கடலுக்குச் சென்றன
ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்து கடந்த 2 வாரமாக கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று காலை ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று கடலுக்குள் சென்றனர்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவது தொடர் கதை ஆகிவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால வரையற்ற வேலநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.
அன்மையில் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இலங்கை மீனவர்கள் குழு சென்னையில் தமிழக மீனவர்கள் தலைவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மீன் பிடிப்பதில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி ஆலோசனை நடத்தினர்.
இதில் தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையே டோக்கன் பெற்று 347 படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளன.
கடலுக்குச் சென்றவர்களை சர்வதேச எல்லையை தாண்டாமல், மாரிடைம் சட்டத்தை மதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட மற்ற மீனவர்களும் இன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications