நிரூபமா ராவ் இன்று இலங்கை பயணம்-தமிழர் மறுவாழ்வு குறித்து ஆய்வு

முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. இன்னும் பெரும்பாலானவர்கள் முகாம்களிலேயேதான் உள்ளனர். மறு குடியமர்த்தப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் பெரும்பாலானோர் இன்னும் சொந்த கிராமங்களுக்குப் போக முடியாத அவல நிலையில்தான் உள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லை, போரினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விமோச்சனம் இல்லை, வாழ வழியில்லை என தமிழர்கள் தொடர்ந்து பெரும் துயரில் மூழ்கியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கி முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில் ஒரு சிறப்புத் தூதரை அனுப்பி இலங்கை நிலவரம் குறித்த உண்மை நிலையை அறிந்து வர வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதையடுத்து சமீபத்தில் நிரூபமா ராவ் சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவர் இலங்கை செல்கிறார்.
போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் தமிழர் பகுதிகளின் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசுடன் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் அவர் செல்லக் கூடும் எனத் தெரிகிறது.
ராஜபக்சேவையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். சமீபத்தில்தான் பசில் ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது நிரூபமா இலங்கை வருகிறார்.












Click it and Unblock the Notifications