நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.வுடன் திடீர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7-ம் தேதி திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பட்டமளிப்பு விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழா முடிவடைந்ததும், துணைவேந்தர் அறைக்குச் சென்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரான திமுக எம்.எல்.ஏ. மாலைராஜா துணைவேந்தரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது மாலைராஜாவைத் தடுத்த பல்கலைக்கழக விளையாட்டுத்துறை பேராசிரியர் தேவதாசை, மாலைராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து உதைத்ததாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடனடியாக கண்டித்து அறிக்கை வி்ட்டிருந்தார். தலித் வகுப்பைச் சேர்ந்த துணைவேந்தரை திமுக எம்.எல்.ஏ தாக்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருந்தார். பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. துணைவேந்தரின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், இறைச்சகுளத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மாலைராஜா மீது எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று திடீரென சென்னை வந்த துணைவேந்தர் காளியப்பன் தனது மனைவியுடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பதவியில் உள்ள ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவை சந்தித்திருப்பதால் இது சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications