தர்மபுரி பஸ் எரிப்பு: வேடிக்கை பார்த்த போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.
இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய அதிமுகவினரின் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்துக் கூறியதாவது:-
அரசியல் காரணங்களுக்காக 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.
இது சமூகத்துக்கு எதிரான, காட்டு மிராண்டிதனமான, மிகக் கொடுமையான செயல்.
உச்ச நீதிமன்றம் மிகவும் அரிதான வழக்குகளில் தான் தூக்கு தண்டனை வழங்கி வருகிறது. இதுவும் ஒரு அரிதான வழக்கு. எனவே 3 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை நியாயமானதே
இதுபோன்ற செயல்கள் இனி நடக்கவே கூடாது.
மாணவிகள் வந்த சுற்றுலா பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டபோது போலீசார் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த வழக்கில் மேலும் தண்டனை பெற்ற 25 பேரும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே தண்டனையை அனுபவித்து முடித்திருந்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றனர் நீதிபதிகள்.