மீண்டும் கொடநாடு எஸ்டேட்டுக்கு போய்விட்ட ஜெயலலிதா
சென்னை: கடந்த சில மாதமாக திமுக அரசுக்கு கடும் டென்ஷனைக் கொடுத்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திடீரென கொடநாடு கிளம்பிப் போய் விட்டார். இதனால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பல மாத கொடநாடு வாசத்திற்குப் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார் ஜெயலலிதா. வந்த வேகத்தில் கோவையில் பிரமாண்டக் கண்டனக் கூட்டத்தைக் கூட்டி திமுக தரப்பை திகிலடைய வைத்தார்.
அந்த திகில் மாறாத நிலையில் திருச்சியில் இன்னொரு பிரமாண்ட கூட்டத்தைப் போட்டார். அடுத்து மதுரையிலும் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தரப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இன்று திடீரென கொடநாடு கிளம்பிப் போயுள்ளார் ஜெயலலிதா. அவருடன் வழக்கம் போல தோழி சசிகலாவும் போயுள்ளார்.
இன்று முற்பகல் விமானம் மூலம் கோவை சென்ற ஜெயலலிதாவை அதிமுக பிரமுகர்கள் கும்பிடு போட்டு வழியனுப்பி வைத்தனர்.
தொடர் கூட்டங்களால், படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த அதிமுகவினருக்கு, ஜெயலலிதாவின் இந்த திடீர் கொடநாடு பயணம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜெயலலிதா மீண்டும் எப்போது மலையிலிருந்து இறங்கி வருவார் என்பது தெரியவில்லை.