செப். 19ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் குமரியில் முப்பெரும் விழா
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
செப் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள், செப் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தோன்றிய நாள் விழா ஆகிய முப்பெரும் விழா குமரி மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று குமரி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சுரேஷ்ராஜன் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அமைச்சரின் கோரிக்கையை ஏற்று குமரி மாவட்டத்தில் செப் 19ம் தேதி முப்பெரும் விழா நடத்த முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்காக முதல்வர் கருணாநிதியை அமைச்சர் சுரேஷ்ராஜன் அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செப் 19ம் தேதி நடைபெறுகின்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி, திமுக பொருளாளர், துணை முதல்வர் முக ஸ்டாலின், பொது செயலாளர், நிதியமைச்சர் அன்பழகன் உள்பட திமுக முக்கிய புள்ளிகள் கலந்து கொள்கின்றனர்.
முப்பெரும் விழாவை மாநாடு போல நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் சுரேஷ் ராஜன் முடுக்கி விட்டுள்ளார்.