ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 10 பேர் கொண்ட கும்பல் 29 சவரன், ரூ.2 லட்சம் கொள்ளை
சென்னை: கூடுவாஞ்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. ஆறரை லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றள்ளது.
கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பரமசிவம் (46). இவர் தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை அருகேயுள்ள உறவினர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனது மனைவி பூவதி (35) மற்றும் மகள், மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அந்த பண்ணை வீட்டிற்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பரமசிவத்தின் தலையில் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கம் அடைந்து விட்டார். மேலும், அந்த கும்பல் பரமசிவத்தின் மனைவியையும் அடித்து உதைத்தனர்.
அதன் பிறகு வீட்டில் இருந்து 29 சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.2 லட்சம், வெள்ளி பொருட்கள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள நில பத்திரங்கள் ஆகியவற்றை அந்த கொள்ளை கும்பல் திருடிக் கொண்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டது.
இந்த சம்பவம் குறித்து பரமசிவம் போலீசில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.