மாஜி அமைச்சர் என்கேகேபி ராஜா மீதான வழக்குகளை வெளிமாநிலத்திற்கு மாற்றக் கோரி வழக்கு
டெல்லி: முன்னாள் திமுக அமைச்சரும், ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவருமான என்கேகேபி ராஜா மீதான வழக்குகளை வெளிமாநிலத்திற்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், தற்போது நடந்து வரும் வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக கைத்தறித்துறை முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது 80 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்றதாகவும், குகமணி என்பவரை கடத்தியதாகவும் ஈரோடு கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகின்றன.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து ராஜா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மாவட்ட திமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து திமுகவில் ஆக்கப்பூர்வமாக அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கும்படியும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் குகமணி, சுப்பிரமணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் கபீர், பட்நாயக் ஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், ராஜா தொடர்பான வழக்கை ஈரோடு நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், ராஜா உள்ளிட்ட 30 பேர் இது குறித்து பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications