இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்கலாம்-சுற்றுலா பயணிகளுக்கு ஆஸி. அரசு எச்சரிக்கை
மெல்போர்ன்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என்பதால் மிகுந்த கவனத்துடன் இந்திய பயணத்தை மேற்கொள்ளுமாறு தனது நாட்டவருக்கு ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. அங்கு தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடக்கின்றது. இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். எனவே, காஷ்மீருக்கு சுற்றுலா செல்பவர்கள் லடாக்கைத் தவிர வேறு எங்கும் செல்ல வேண்டாம்.
மேலும், அசாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய வட கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பு நிலை சரியில்லாததால் அங்கும் செல்ல வேண்டாம்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் சுற்றுலா செல்லும்போது பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை, ஹோட்டல்கள், வர்த்தக மையங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எங்கு சென்றாலும் அங்குள்ள பாதுகாப்புச் சூழலை தெரிந்து கொண்ட பிறகு செல்லவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை அமெரிக்க அரசும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.