ஜெ. பரிசுப் பொருள் வழக்கில் இனி வாய்தா தர முடியாது-சிபிஐ கோர்ட் நீதிபதி கண்டிப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான பரிசுப் பொருள் வழக்கில் இனியும் வாய்தா தர முடியாது என்று சிபிஐ கோர்ட் நீதிபதி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பரிசாக ரூ. 2 கோடி அளவுக்கு காசோலைகள் கொடுக்கப்பட்டன.
இவற்றை தனது வங்கி கணக்கில் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. சுமார் 2 கோடி மதிப்புள்ள காசோலைகளை தனது வங்கி கணக்கில் வரவு வைத்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா, அப்போதைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு (இவர் இப்போது திமுகவில் இருக்கிறார்) ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று 3 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதேசமயம், 10 ஆண்டுகள் காலதாமதத்துடன் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி 3 பேரும் தாக்கல் செய்த மனு சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கை வேறுதேதிக்கு தள்ளி வைக்குமாறு கோரினார். இதை ஏற்ற நீதிபதி ரவீந்திரன் வருகிற 14ம் தேதி தள்ளி வைத்தார். அதேசமயம், மீ்ண்டும் வாய்தா தர முடியாது என அவர் கண்டிப்புடன் கூறினார்.