கொடநாடு எஸ்ட்டேடில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் முற்றுகை

கோவை, திருச்சி என படு சுறுசுறுப்பாக அதிமுகவினரை முடுக்கி விட்ட ஜெயலலிதா திடீரென நேற்று கொடநாடு கிளம்பி வந்து விட்டார். சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு எஸ்டேட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.
வழியெங்கும் அதிமுகவினர் வரவேற்பு:
வழியில் நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் மாவட்ட அதிமுக செயலர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதையடுத்து கொட்டகம்பை பகுதியில் கொணவக்கரை ஊராட்சித் தலைவர் வீரமுத்து தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அரவேணு பகுதியில் சக்கத்தா கணேஷ் தலைமையிலும், டானிங்டன் பகுதியில் சிடிசி ஜப்பார் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எஸ்.கைகாட்டி, குருக்கட்டி, ஈளாடா ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடநாடு எஸ்டேட் நுழைவாயிலுக்கு வந்த ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ், அதிமுக பிரமுகர்கள் எல்.மணி, கே.கே.மாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். வழியெங்கும் அளிக்கப்பட்ட வரவேற்புகளில் பொதுமக்கள் அளித்த பூங்கொத்துகளை ஜெயலலிதா பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் 40 நாள்கள் வரை தங்கியிருந்து முக்கிய அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
அதிமுகவினர் திடீர் முற்றுகை:
இந்த நிலையில் இன்று அங்கு நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றியச் செயலாளர் புத்திசந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்திச்சந்திரனை நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் வேண்டும் என்றே நீக்கியுள்ளார். அவரது நீக்கத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கூட்டத்திற்கு வருவாரா?
கொடநாட்டில் 40 நாட்கள் ஜெயலலிதா தங்கப் போவதாக கூறப்படுவதால் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை கலந்து கொண்டாலும் ஹெலிகாப்டரிலேயே வந்து ஹெலிகாப்டரிலேயே திரும்பிச் செல்வார் என்று தெரிகிறது.
விமானம் தாமதம்:
முன்னதாக ஜெயலலிதா நேற்று காலை 11.15 மணிக்கு தனி விமானத்தில் கோவைக்கு செல்வதாக இருந்தது. ஆனால் தாமதமாக மதியம் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சசிகலா மற்றும் உதவியாளர், பணிப்பெண்கள். பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் கோடநாட்டுக்கு சென்றார்.
விமான நிலையத்தில் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications