கோமாரி நோயை தடுக்க 4.15 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து நெல்லை வருகை
நெல்லை: கால் நோய், வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மழை மற்றும் பனிக்காலங்களில் கால்நடைகளை தாக்கி வருகிறது. நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்நோய் கால்நடைகளை அதிகம் தாக்குகிறது.
வாயில் புண் மற்றும் கொப்புளங்கள், கால்குளம்புகளில் புண், வாயில் உமிழ்நீ்ர் வடிதல், தீவனம் உட்கொள்ளாதிருத்தல் ஆகியவை கோமாரி நோயின் அறிகுறிகளாகும்.
கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்க தமிழக அரசின் சார்பில் இலவச தடுப்பூசி ஆண்டுதோறும் போடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு கோமாரி நோயை தடுக்க 4 லட்சத்து 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.
கால்நடை பராமரிப்பு துறையினர் 67 குழுக்களாக பிரிந்து இந்நோய்க்கான தடுப்பூசிகளை போடுகின்றனர். மொத்த மருந்தின் விலை ரூ.25 லட்சத்து 74 ஆயிரம் ஆகும். ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.6.50 ஆகும்.
கோமாரி நோய்க்கு தடுப்பூசி போட இதுவே தக்க தருணம் என்பதால் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டல் இணை இயக்குனர் சிவானந்தம், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் குமரகுருபரன் ஆகியோர் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தடுப்பூசி காரணமாக நெல்லை மாவட்டத்தில் கோமாரி நோயே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாக கால்நடை துறை தெரிவித்துள்ளது.