ஆணையும் பெண்ணையும் 'சமமாக்கிய' பிரணாப் முகர்ஜி!

ஒரு வீதத்தில் வரி செலுத்தும்படி செய்துள்ளது!
நேரடி வரி வசூல் முறையில் தற்போது வருமான வரிச்சட்டம் 1961 இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள குறைகளைப் போக்கும் வகையில் நேரடி வரி விதிப்புக்கான புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த புதிய வரி விதிப்பு சட்டம் 2012 ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்துதான் அமலுக்கு வர உள்ளது. அதுவரை வரி விதிப்பு மாற்றங்களை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
எவ்வளவு சேமிக்கலாம்?
புதிய சட்டத்தின்படி தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போதுள்ள 1.6 லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் இனி 10 சதவீதம் வரி கட்ட வேண்டும்.
5ல் இருந்து 10லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதம் வரி கட்ட வேண்டும். 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள் 30 சதவீத வரி கட்ட வேண்டும்.
புதிய வரி விகிதப்படி ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.7600 வரை சேமிக்க முடியும்.
5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் ரூ.21,540 வரையும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூ.41 ஆயிரம் வரையிலும் சேமிக்க முடியும்.
இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.53,172 கோடி இழப்பு ஏற்படும் என்று வருவாய் துறை செயலாளர் சுனீல் மித்ரா நிருபர்களிடம் கூறினார். புதிய வரி விகிதப்படி அனைத்து தரப்பினருக்கும் வருமான வரி செலுத்துவது குறைந்துள்ள போதிலும் எதிர்பார்த்த சில சலுகைகள், கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இருந்த சில சலுகைகள் புதிய சட்டத்தின்படி பறிபோக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக் கடனைச் சேர்க்க முடியாது!
குறிப்பாக வீட்டுக்கடன் தொகையை வருமான வரி விலக்குக்குப் பயன்படுத்துவதில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
வீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் அசல் தொகையையும், வட்டித் தொகையையும் அப்படியே வருமான வரி விலக்குக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய சட்டத்தின்படி இனி வீட்டுக் கடனுக்கான திருப்பி செலுத்தும் தொகையில் வட்டி தொகையை மட்டுமே வருமான வரி விலக்கில் சேர்க்க முடியும்.
ஆனால் ஓய்வூதியம், கருணைத்தொகை, பி.எப். ஆகியவற்றை வருமான வரி விலக்கில் சேர்க்க எந்த சிக்கலும் இல்லை.
குழந்தைகளுக்கான டியூஷன் கட்டணம் ரூ.50 ஆயிரம் வரை வரிவிலக்கில் சேர்க்கும் விதிமுறை தொடர்கிறது.
மியூச்சல் பண்ட்ஸ், லைப் இன்சூரன்சு மூலம் வருமானத்துக்கு இதுவரை வரி எதுவும் விதிக்கப்படாமல் இருந்தது. புதிய சட்ட மசோதாவில் இந்த வருமானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு தனி சலுகை இல்லை!
நேரடி வரி விதிப்புக்கான புதிய சட்ட மசோதாவில் தங்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்று பெண்கள் தரப்பில் எதிர்ப்பார்த்தனர். மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது போல தங்களுக்கும் உயரும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் பெண்களுக்கு என்று சலுகை காட்டப்படவில்லை. ஆண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது போல ரூ.2 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்பதே பெண்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரி விலக்கு சலுகைக்கு இதுவரை இருந்து வந்த ஆண், பெண் என்ற பேதம் நீக்கப்பட்டுள்ளது!












Click it and Unblock the Notifications