கருணாநிதிக்கே காவல்துறை மீது நம்பிக்கை இல்லை-பாஜக சொல்கிறது
சென்னை: காவல்துறையை தனது பொறுப்பி்ல் வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கே காவல்துறை மீதான நம்பிக்கை போய் விட்டது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் மீது முதல்வர் கருணாநிதிக்கு நம்பிக்கை போய்விட்டது.
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து பாஜக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு வேளை கூட்டணி இல்லாவிட்டால், எங்களது சொந்த பலத்தில் சில தொகுதிகளில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்வோம்.
கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைக்கு பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். இதேபோல் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இந்திய உணவுக்கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உள்ள உணவு தானியங்கள் பாழாகி இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதனை பாதுகாத்து ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தற்போது 9 ஆயிரத்து 144 டன் அரிசியும், 2 ஆயிரத்து 446 டன் கோதுமையும் பாழாகி இருப்பதாக தெரிகிறது. எதிர்காலத்தில் மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.